சென்னை: சென்னையில் விநாயகர் சிலை கரைப்பால் கடற்கரைகளில் 2 நாட்களாக கரை ஒதுங்கிய 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகரில் 1800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிலைகளை கரைக்க சென்னையில் பட்டினப்பாக்கம் - சீனிவாசபுரம், காசி மேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் யுனிவர்சல் கார்போரண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், நீலாங்கரை- பல்கலைநகர், எண்ணூர்- ராமகிருஷ்ணா நகர் ஆகிய 6 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஏற்றி வரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கிச் சென்று கடலில் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன. அவ்வாறு கடலில் கரைக்கப்பட்ட சிலைகளிலிருந்து மரக்கட்டைகள் உள்ளிட்டவை 2 நாட்களாக கரை ஒதுங்கி வருகின்றன.
இவற்றை அகற்றும் பணியில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக மொத்தம் 140 டன்கழிவுகளை அகற்றியுள்ளனர். அதிகபட்சமாக மெரினா லூப் சாலையில் 49 டன், சீனிவாசபுரம் பகுதியில் 43 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.