கொடைக்கானலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் அதிசய ‘நெதர்லாந்து லில்லி’ மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் பராமரிக்கப்படும் இந்த பூங்காக்களில், பல்வேறு காலநிலைகளில் பூத்துக்குலுங்கும் பல வகையான மலர் செடிகள் உள்ளன. தற்போது பிரையன்ட் பூங்காவில் நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட லில்லி மலர் செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த பூக்கள் கிழங்கு வகையைச் சேர்ந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை உடையது. 15 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும். இந்த பூக்களில் இருந்து ஒருவித மனம் வீசுகிறது. தற்போது, பூங்காவில் சிவப்பு, மஞ்சள், நீலம், ஆரஞ்சு வண்ணங்களில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.