கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக பகுதியில் நாய்கள் கடித்ததில் மூன்று மான்கள் உயிரிழந்தன.
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று மான்களை நாய்கள் துரத்துவதாக வனத்துறையினருக்கு நேற்று (மே 15) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
மேலும், மானின் உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் தென்பட்டன. அப்பகுதியில் நாய்களின் கால்தடமும் தென்பட்டது. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் வனச்சரக அலுவலர் திருமுருகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி வடவள்ளி கால்நடை மருத்துவர் மூலம் இறந்த மான்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.