ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் மீனை அப்பகுதி மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி யில் திமிங்கலம், கடல் பசு, சுறா, டால்பின் உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகளில் சிக்கி அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன. சில மீன்கள், மீனவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு.
இந்நிலையில், வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை வலை மீன்பிடியில் மீனவர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். வலையை கரைக்கு கொண்டு வந்தபோது வலையில் டால்பின் மீன் ஒன்றுசிக்கியிருப்பதைப் பார்த்தனர்.
உயிருடன் இருந்த டால்பினை வலையிலிருந்து மீட்ட மீனவர்கள், அதை மீண்டும் கடலில் கொண்டு விட்டனர். ஆழமான கடல் பகுதிக்குள் சென்றதும் டால்பின் உற்சாகமாக நீந்திச் சென்றது.
இந்த வீடியோவை தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, வலையில் சிக்கிய டால்பினை கடலில் உயிருடன் விட்ட மீனவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.