மேட்டூர்: மேட்டூர் அருகே வழி தவறி வீட்டுக்குள் புகுந்த புள்ளிமானை வனத் துறை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டாமங்கலம் நஞ்சப்ப கார்டன் பகுதியை சேர்ந்தவர் திருக்கைவேலு. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இன்று மதியம் பாலமலை வனப்பகுதியில் இருந்த வழி தவறி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று துள்ளி குதித்து ஓடி வந்தது. அப்போது, வீட்டின் அருகே இருந்த கம்பிவேலி மோதியதில் காயமடைந்து, வீட்டிற்குள் புகுந்தது. அந்த புள்ளி மான் காயங்களுடன் இருப்பதை பார்த்து, திருக்கைவேலு குடும்பத்தினர், சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் வெளியே செல்லாத வகையில் வீட்டின் கேட்டை பூட்டினர்.
பின்னர், மேட்டூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டூர் வனச்சரக அலுவலர் சிவனாந்தம், தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் வீட்டில் இருந்த புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் கொண்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் ஆண் புள்ளிமானை வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.