சுற்றுச்சூழல்

எலைட் படையுடன் தேடியும் சிக்காத புலி - பேச்சிப்பாறை வனப்பகுதியில் தொடரும் அச்சம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: பேச்சிப்பாறை வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க எலைட் படையுடன் சேர்ந்து வனத்துறையினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை புலி கடித்து குதறியது.இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

25 கேமராக்கள்: புலியை பிடிக்க சிற்றாறு வனப்பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இரு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் இரவு நேரங்களில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்படுகின்றன.

கூண்டில் புலி சிக்காததை தொடர்ந்து புலியை பிடிக்க களக்காடு முண்டந்துறையில் இருந்து மருத்துவ குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்றுள்ள எலைட் படையினரும் வந்துள்ளனர். அவர்கள் சிற்றாறு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிலோன் காலனி, மூக்கறைகல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இந்நிலையில் நேற்றும் தேடுதல் வேட்டை நடந்தது. வன அதிகாரி இளையராஜா தலைமையில் எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

மோப்ப நாய் உதவி: ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேர், பழங்குடி மக்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இரு குழுக்களிலும் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடி மக்கள் காட்டுப்பகுதிகளில் வழிகளை அடையாளம் காட்டிக்கொடுக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பேச்சிப்பாறை மூங்கில் காடு பகுதியில் நேற்று தேடும் பணி நடந்தது. வனத்துறையின் மோப்பநாய் உதவியுடன் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாலை வரை புலி சிக்கவில்லை. புலியின் அச்சுறுத்தல் உள்ளதால் சிற்றாறு மலைகிராம மக்கள் மாலை நேரத்துக்கு பின்னர் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT