சென்னை: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான (ஜேஆர்எஃப்) மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை பாடவாரியாக நடத்தப்பட்டது. மொத்தம் 9.94 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலையில், 7.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு 54,713 பேர், ஜேஆர்எஃப் உதவித் தொகைக்கு 5,108 பேர், பிஎச்டி படிப்புக்கு ஒரு லட்சத்து 17,058 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 76,879 பட்டதாரிகள் (24%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.