சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு - தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டகலந்தாய்வு நிறைவடைந்துள் ளது. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் 9,437 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பட்டுள்ளன. 2-ம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் செப்.15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இடஒதுக்கீடு பெற்றவர்கள் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த 250 இடங்களும், நடைபெறும் 2-ம் சுற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கெனவே இடங்களை எடுத்த மாணவர்கள், மறுஒதுக்கீட்டுக்கு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.