தஞ்சாவூர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) இளங்கலை மாணவர் சேர்க்கை – 2026 தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்வு இன்று தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் அமைந்துள்ள டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ரா.விஜய் சரவணன், வேளாண்மை உற்பத்தி ஆணையரும், தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளருமான பி. சங்கர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரா.ரேவதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் & பொறுப்பு துணைவேந்தர் கே.சுப்பிரமணியன் , இளங்கலை (வேளாண்மை), முதன்மையர் சி.பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை – 2026 தரவரிசைப் பட்டியலை அமைச்சர் ர.வினோத் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், வேளாண்மைக் கல்வியின் முக்கியத்துவம், நவீன தொழில்நுட்ப வேளாண்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான வேளாண் வளர்ச்சியை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி, மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் வேளாண் முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த தரவரிசைப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் சேர்ந்த மெர்லின் மற்றும் ஈரோடு சேர்ந்த மாதவராஜ் ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.