புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ல் நடைபெற்றது. இதன் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே ராஷ்டிரீய ஜனதா தள கட்சியைச் சார்ந்த எம்.பி சுதாகர் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட புகார்களைத் தடுக்க ஜுன் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி எஸ் நரசிம்மா, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘‘தேசிய தேர்வுகள் முகமை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதால் நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.
நீட் தேர்வு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்த கோரிய மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றனர்.