சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான சிறப்புக் கலந்தாய்வு, அரசுப் பள்ளியில் படித்த மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஜூலை 13 முதல் 19 வரை நடைபெற்றது. இதன்மூலம் 900 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20 முதல் 22 வரை நடந்தது. இதில் 32,250 பேர் விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 28,550 பேருக்கு தரவரிசை, கல்லூரியில் உள்ள இடங்கள், விருப்ப பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்துக்கும் (TFC) இறுதி (Provisional) ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிக்கும் ஜூலை 30-ம் தேதிக்குள் நேரடியாக சென்று அசல் சான்றிதழ்கள், கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெற வேண்டும்.
ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகளையும், எத்தனை பாடப்பிரிவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை கையாளும் வகையில் திறன் மிகுந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர் களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது; மாணவர்களின் விவரங்களைக் கொண்டு தவறான சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் நடைமுறையில் வேறு புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை tndote@tndote.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.