அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை அயனாவரத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த ஆசிரியைகள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வில் முதல் தாள் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர்தகுதித் தேர்வில்(‘டெட்’) தேர்ச்சி பெறுவதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவும் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், ஆசிரியர்களின் வசதிக்காக நடப்பாண்டு 3 சிறப்பு ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு ‘டெட்’ தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் முதல் தாள் தேர்வை 59,535 ஆசிரியர்கள் எழுதினர். 1,851 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். தேர்வெழுத வந்த ஆசிரியர்களை போலீஸார் முறையான சோதனைகளுக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். அம்பத்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கிடையே, முதல்தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், முந்தைய ‘டெட்’ தேர்வு வினாத்தாள்களை ஒப்பிடுகையில், இதில் சவாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-ம் தாள் இன்று (5-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்வை 1,67,743 பேர் எழுதுகின்றனர். தேவையான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி)மேற்கொண்டுள்ளது.