சென்னை: தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றலில் அவர்கள் நிலைக்கேற்ப அரும்பு, மொட்டு, மலர் மற்றும் அனைத்து பாடங்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு முதன்முதலாக ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படவுள்ளது. இந்த வினாத்தாளை அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கி மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
இந்த வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டிய மாணவர்கள் விவரப் பட்டியலை சம்பந்தப்பட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். தேவையெனில் இதுதொடர்பாக சார்ந்த பள்ளியின் சிறப்பு பயிற்றுநர் ஆசிரியர்களுக்கு உதவலாம்.