சென்னை: ரஷ்யன் ஹவுஸ் – சென்னை சார்பில் 2-வது அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி ஜூலை 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இந்தக் கல்விக் கண்காட்சியின் மூலம் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ரஷ்யாவின் முன்னணி அரசு, மாநில மற்றும் கூட்டாட்சி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து எம்பிபிஎஸ் மற்றும் பிற உயர் கல்வி படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் பெறும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் ஒரே வெளிநாடாக ரஷ்யா திகழ்கிறது.
இதனால், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 5,000 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்காக சுமார் 8,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா ஹவுஸ் தெரிவித்துள்ளது.