கல்வி

உயர் கல்வி, வெளிநாட்டு வேலை, கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்களுக்கு சான்றொப்பம்: அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கு கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பம் மற்றும் அங்கீகார சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) சென்னை கிண்டியில் (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பான தேவைகளுக்காக கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பம் (Attestation) மற்றும் அங்கீகாரம் (Apostille) அளிக்கும் சேவைகளை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோர்களுக்காக வழங்கி வருகிறது.

இதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நேரடியாக அணுகும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு சான்றிதழுக்கு சான்றொப்பம் பெற ரூ.900-ம்- மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் 18 சதவீதம் மட்டும் பெறப்படுகிறது. பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படையான முறையிலும் இச்சேவைகளைப் பெறுவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன் பெறலாம்.

எனவே, சான்றொப்பம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் சேவைகளைப் பெற விரும்பும் மாணவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோர் மற்றும் பொதுமக்கள், இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் 9566239685, 6379179200, 044-22502267 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT