சென்னை: தமிழக உயர்கல்வித் துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணை: நடப்பு (2026-27) கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலைப் பாடப் பிரிவுகளுக்கும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் 20 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தேவையுள்ள கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் முதன்முதலில் ஒப்பளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் கூடுதல் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். இந்த கூடுதல் சேர்க்கை அனுமதி நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். தவிர, கூடுதல் சேர்க்கைக்காக கூடுதல் பணியிடங்கள் கேட்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.