சென்னை: பொறியியல் கல்லூரி பொதுக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி முடிந்துள்ளது. ஜூலை 20 முதல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்கள், பெற்றோரின் பல்வேறு சந்தேகங்களுக்கு கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:
கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 171.33 கட்ஆஃப் மதிப்பெண் இருப்பவர்களுக்கு நடைபெற்றது. இதற்கு கீழ் கட்ஆஃப் உள்ளவர்களுக்கு 2 மற்றும் 3-ம் கட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும். ஆன்லைன் கலந்தாய்வு என்பதால் மாணவர் அவர்களின் இடத்திலிருந்தே பிடித்த கல்லூரி, பிடித்த துறையை தேர்வு செய்யலாம்.
மாணவர்கள் தங்களின் கட்ஆஃப் அடிப்படையில் எந்தக் கல்லூரியில், எந்த துறையை தேர்வு செய்ய வேண்டும் என அறிந்து தேர்வு செய்வது நல்லது.
எனது முதல் விருப்பம் இது, அது இல்லையென்றால் இந்த பிரிவில் இந்தக் கல்லூரியில் இடம் ஒதுக்குங்கள் என்று ஒரு மாணவர் எத்தனை விருப்பத்தை வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.
படித்து முடித்த பிறகு வேலைவாய்ப்பு பற்றியும் அப்போது தெளிவாக சிந்திப்பது முக்கியம். இந்தத் துறையை தேர்வு செய்து படித்தால்தான் நல்லது, இந்த கல்லூரிதான் சிறந்தது என்று யாராலும் கணித்து கூற முடியாது. எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் நன்றாக புரிந்து படித்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பது மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அஸ்வின் கூறினார்.