சென்னை: அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி, சேர்க்கையை உறுதி செய்வதற்காக, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘உயர்கல்வி வழிகாட்டி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும், வகுப்பு ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
கல்லூரிக் கல்வி, தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் அதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை அவர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கின்றனர். பின்தங்கிய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆசிரியர்களின் பெயர்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
ஜூன் 30-ம் தேதிக்குள்..
அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைந்தால் மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதிசெய்ய முடியும்.
இந்த இலக்கை அடைய ஏதுவாக, பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் யாரேனும் பணிபுரிந்த பள்ளியில் இருந்து மாறுதல் பெற விரும்பினாலோ, ஓய்வு பெற்றாலோ, பொறுப்பில் இருந்து விலக விரும்பினாலோ அவருக்கு பதிலாக, தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும்.
அதன்படி, 250 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களை ஜூன் 30-ம் தேதிக்குள் தேர்வு செய்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இந்த விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.