சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 2026-27-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற விரும்பும் ஒரு தொழிற்பள்ளி, ஒரே ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தாலே போதுமானது. அதில் தேவையான அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் குறித்த விவரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆய்வுக் கட்டணமாக ரூ.8 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணையம் வாயிலாக வரும் பிப். 28-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-25201163 என்ற தொலைபேசி எண்ணிலோ ricentrenorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று சென்னை ஆட்சியர் கூறியுள்ளார்.