சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.17) முதல் தொடங்குகிறது. இந்தத் தேர்வை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.17) தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் பத்தாம் வகுப்பு தேர்வை 25 லட்சத்து 8319 பேர், 12-ம் வகுப்பு தேர்வை 18 லட்சத்து 59,551 பேர் என மொத்தம் 43 லட்சத்து 67,870 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக நாடு முழுவதும் 8,074 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 10-ம் வகுப்புக்கு கணிதம் பாடத்துக்கும், 12-ம் வகுப்புக்கு உயிரிதொழில்நுட்பம் முனைவோர் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வு மையத்தில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளன.
மாணவர்கள் செல்போன் உட்பட மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வுக் காலங்களில் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பெற்றோர், மாணவர்கள் நம்பவேண்டாம் எனவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.