”கல்வித் துறையில் தொழில்நுட்பப் புரட்சி வரவேற்கத்தக்கது. அவசியமனாதும் கூட. ஆனால், அது மாணவர்களின் மதிப்பெண்களை பதம்பார்த்து அவர்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் என்றால் அத்தகைய மாற்றத்தால் என்ன பயன் இருந்துவிட முடியும்?” என்று அண்மையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இம்முறை பரவலாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுவும், ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வில் நல்ல பெர்சென்டைல் பெற்ற மாணவர்கள் கூட 12-ம் வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக ஆதங்கக் குரல்களை ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், மத்திய கல்வி அமைச்சகம்அளித்த விளக்கத்தில் ; ‘சிபிஎஸ்இ-யின் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும்’ என்று கூறியுள்ளது.
அதேபோல் சிபிஎஸ்இ நிர்வாகமும், ‘ஓஎஸ்எம் என்பது வினாத்தாள் மதிப்பீடு முறை அல்ல, மாறாக வினாத்தாள்களின் ஸ்கேண்டு காப்பிகளை கணினி வழியில் மதிப்பீடு செய்வதே ஆகும்’ என்று விளக்கியுள்ளது.
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை On-Screen Marking (OSM) குறித்து, அதன் மீது மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி தெரிவிப்பது ஏன் என்பது குறித்தும் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை என்றால் என்ன?
மாணவர்கள் விடைத்தாள்களை ஆசிரியர்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் காப்பிகளை கணினியில் பார்த்து மதிப்பீடு செய்யும் முறையாகும். மதிப்பீடு செய்யும் முறைதான் மேனுவலில் இருந்து கணினி வழியாக மாறுகிறதே தவிர மதிப்பெண் வழங்கும் முறையும், மதிப்பீட்டு விதிகளும் அதேநிலையில் தான் தொடர்கிறது என்று விளக்கமம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்படி முதலில் மாணவர்களின் விடைத்தாள்கள் முதலில் ஸ்கேன் செய்யப்படுகிறது. ஸ்கேன் செய்யும்போது மாணவர்களின் அடையாளம் தெரியாதவண்ணம் ரகசியம் காப்பது உறுதி செய்யப்படுகிறது. பின்னர் அந்த ஸ்கேண்டு விடைத்தாள் பிரதி பல்வேறு பிராந்தியங்களிலும் நியமிக்கப்பட்ட பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பகிரப்படுகிறது.
இவ்வாறாக ஆன்லைனில் விடைத்தாள் திருத்துவது என்பது துல்லியத் தன்மையை உறுதி செய்யும். கூட்டல் மற்றும் அட்டவணைப்படுத்தல் பிழைகளைக் குறைப்பதன் மூலம், மதிப்பிடுவதில் துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும். இதுவே, இந்த முறையின் நோக்கம் என்று சிபிஎஸ்இ கூறுகிறது.
மேலும், ஓஎஸ்எம் முறை, மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாகவும், நிர்வாகச் சுமையைக் குறைப்பதாகவும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் கூறுகிறது.
இது முதன்முறை அல்ல..
சிபிஎஸ்இ தேர்வு வாரியம் ஓஎஸ்எம் மதிப்பீட்டு முறையைப் பின்பற்றுவது முதன்முறை அல்ல என்றே கூற வேண்டும். 2014-ம் ஆண்டிலேயே இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், விடைத்தாள்களை ஸ்கேன் செய்வதில் இருந்த நடைமுறைச் சிக்கல், உட்கட்டமைப்பு வசதிகள் சிக்கல் காரணமாக அந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இந்த நிலையில்தான் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்த ஓஎஸ்எம் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கியதாகவும், இப்போது ஸ்கேனிங் தொழில்நுட்பம் பலமடங்கு மேம்பட்டு எளிதாகிவிட்டதாகவும் சிபிஎஸ்இ வாரியம் கூறுகின்றது.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் எல்லாமே மதிப்பீட்டுக்கு முன்னர் குவாலிட்டி செக் செய்யப்படுகின்றன. ஒருவேளை விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர் ஸ்கேன் காப்பி தெளிவானதாக இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் அவர்கள் உடனடியாக ரீஸ்கேன் கோரும் வாய்ப்பும் உள்ளது என்கின்றனர் சிபிஎஸ்இ அதிகாரிகள்.
அதையும் மீறி ஸ்கேனிங் சிக்கலை சந்தித்த 13 ஆயிரம் விடைத்தாள்கள் இந்த ஆண்டு பழைய நடைமுறையில் கைப்பட திருத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாணவர்கள் சிலர் வெளிர்நீல மை கொண்ட பேனா பயன்படுத்தியதால் இந்த சிக்கல் வந்ததாகத் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதம் சரிவு:
ஓஎஸ்எம் முறை குறித்து எத்தனை விளக்கங்களை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் கொடுத்தாலும் கூட தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சரிந்துள்ளது. கடந்த 2025-ல் தேர்ச்சி விகிதம் 88.39% என்றளவில் இருந்த நிலையில், இந்த 2026-ம் ஆண்டில் 85.20% என்றளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வி துறை செயலர் சஞ்சய் குமாரும், சிபிஎஸ்இ தேர்வு வாரிய தலைவர் ரகுல் சிங்கும், “ஓஎஸ்எம் மதிப்பீட்டு முறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் மறுமதிப்பீடு செய்து கொள்ள விரும்பினால் குறைந்த செலவிலேயே அதை செய்து கொள்ளலாம்.
பல்வேறு தேசிய பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த முறையை ஏற்கெனவே பயன்படுத்துகின்றனர்.
மேலும், முன்பெல்லாம் விடைத்தாள்களை அந்தந்த பிராந்தியத்துக்கு உள்ளேயே தான் மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் இப்போது அந்த எல்லைப் பாகுபாடுகளைக் கடந்து ஓஎஸ்எம் முறையில் ஒரு க்ளஸ்டரில் உள்ள விடைத்தாளையும் எங்கு வேண்டுமானாலும் மதிப்பீடு செய்யலாம்.
இந்த ஆண்டு 98 லட்சம் விடைத்தாள்களை ஸ்கேன் செய்துள்ளோம். அதுவும் மூன்று கட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி. இப்போது உள்ள ஸ்கேனிங் டெக்னாலஜி எல்லாம் அதிநவீமானது. ஒரு விடைத்தாளின் அனைத்தும் பக்கங்களையும் ஒரே சிட்டிங்கில் ஸ்கேன் செய்துவிடலாம்” என்று தெரிவித்தனர்.
ஆய்வு செய்யப்பட்டதா?
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தி இந்து நாளிதழ் தரப்பில், “புதிய மேம்படுத்தப்பட்ட ஓஎஸ்எம் செயல்படுத்துவதற்கு முன்னர் ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?” என்று வினவப்பட, “விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் ஒரே ஒரு புதுமை தான் செய்யப்பட்டுள்ளது. அது, கைப்பட திருத்துவதற்குப் பதில் ஆன்லைனில் திருத்தம் செய்வது” என்று அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
சலுகைகள் என்னென்ன?
முந்தைய ஆண்டுவரை பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிசெய்து கொள்ள அவர்களுக்கு 3 ஆப்ஷன்கள் இருந்தன. முதலில் டோட்டலிங் சரிபார்த்தல். அதாவது மதிப்பெண் கூட்டலை சரிபார்க்க அவர்கள் ரூ.500 செலுத்தி சரி பார்க்க வேனும். அதன் பின்னர் விடைத்தாள் நகலைப் பெறுவது. அதற்கு அவர்கள் தனியாக ரூ.700 செலுத்த வேண்டும். மூன்றாவதாக ரீவேல்யூஷன், அதாவது மறுமதிப்பீட்டுக்கு ஒரு கேள்விக்கு ரூ.100 வீதம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு முதல் கணினி வழி திருத்துதல் என்பதால் டோட்டலிங்கில் நிச்சயமாக பிழை இருக்காது என்பதால் விடைத்தாள் நகல் பெறுதல், ரீவேல்யூஷன் மட்டுமே மாணவர்கள் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை ரூ.700-க்கு பதிலாக ரூ.100 கட்டியே பார்த்துவிடலாம். விடைத்தாளை வேலிடேஷன் செய்ய வேண்டும் என்றாலும் முன்புபோல் அல்லாது வெறும் ரூ.100 செலுத்தினால் போதும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை சரி பார்க்க வேண்டும் என்றால், அதையும் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கேள்விக்கு முன்பு ரூ.100 செலுத்த வேண்டியிருந்த நிலையில் இப்போது ரூ.25 செலுத்தினால் போதும்.
கல்வியாளர்கள் நிலைப்பாடு!
ஓஎஸ்எம் மார்க்கிங் முறை அவசியமானது என்று கல்வியாளர்கள் சிலர் வரவேற்றாலும், கண்டனங்களும் இருக்கின்றன.
என்னதான சிபிஎஸ்இ தேர்வு வாரியமும், கல்வித் துறையும் வெளிப்படைத்தன்மை, மதிப்பீட்டில் துல்லியத்தன்மை என்று சொன்னாலும் கூட பாரம்பரிய முறையில் கைப்பட திருத்துவதே சரியான மதிப்பீடாக இருக்க முடியும்.
மேலும், கிரேடிங் முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து ‘நார்மலைசேஷன் ஆஃப் மார்க்ஸ்’ (Normalisation of Marks) என்ற முறையில் இயற்பியலுக்கு 79, வேதியியலுக்கு 89, கணிதத்துக்கு 85 என்று A1 கிரேடிங்குக்கு மதிப்பெண்கள் நிர்ணயித்திருப்பது தவறானது என்று சுட்டிக்காட்டுகின்றனர். A1 கிரேடிங் மட்டுமல்லாது அனைத்துவிதமான கிரேடிங்கிலும் இந்த மாதிரியான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்ணில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அது அவர்கள் உயர்கல்விக்காக பெரிய நிறுவனங்களின் சேர்வதில் முட்டுக்கட்டை போடும்.
ஜெஇஇ தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படிதான் நடைபெறுகிறது. அப்போது அதில் 99.2 பெர்சன்டைல் வாங்கிய மாணவர் பிளஸ் 2 தேர்வில் 78 பெர்சன்டைல் தான் வாங்குகிறார் என்றால் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் விளக்கம் வேண்டும்,” என்கின்றனர்.