கல்வி

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் நடத்தப்படும் படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

செய்திப்பிரிவு

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசால் தோற்றுவிக்கப் பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது 2026- 27 கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன.

இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வகுப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இரு பாலருக்கான தனித்தனி கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.

மாற்றுச்சான்றிதழ்: நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப் பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.),உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113 ( தொலைபேசி 044 - 2254 2992) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்புக்கு ஜூன் 15ம் தேதிக்குள்ளும், முதுகலை தமிழ் பட்டப் படிப்புக்கு ஜூன் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல் பெற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT