வேலூர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் எஸ்.மோகனப்பிரியா அகில இந்திய அளவில் 577-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே ராஜேந்திரசோழகம் பகுதியைச் சேர்ந்தவர் மோ.ஸ்டாலின். இவர், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இயக்குநராக உள்ளார். இவரது மனைவி இந்திராகாந்தி, ரயில்வேயில் முதுநிலை எலெக்ட்ரிக்கல் பிரிவில் பொறியாளராக உள்ளார். இவர்களது மகள் எஸ்.மோகனப்பிரியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர், இந்திய ஆட்சிப்பணி கனவுடன் தொடர்ந்து படித்து தேர்வெழுதினார்.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமை பணிகள் தேர்வு எழுதிய மோகனப்பிரியா, முதல் முயற்சியில் இந்திய அளவில் 577-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சிஎம்சி மருத்துவர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
‘ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு தனது மருத்துவ அனுபவத்தை கொண்டு கிராமப்புற மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்திட பாடுபட வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள்’ என மோகனப் பிரியா தெரிவித்துள்ளார்.