அரூர்: போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வசதியாக கலசப்பாடி மலைக் கிராமத்தில் நூலகம் அமைத்து தர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி மலைக் கிராமப் பகுதியில் கருக்கம்பட்டி, கோட்டக்கல், அரசநத்தம், மேல் வளவு, அக்கரைக் காடு, தரிசுக் காடு உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இங்கு 4,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது இப்பகுதி மக்கள் கல்வியில் ஓரளவு மேம்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். படித்து போதிய வேலையின்றி உள்ள இவர்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிடவும், அதற்கு தயாராகும் வகையில் கலசப்படியில் நூலகம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்த தருமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.