ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் இருவர் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால காசுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது,
பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் த.பிரவீன்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் மு.ஐயப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்ட வடிவக் காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் மூன்று செப்புக் காசுகள். ஒன்று வெண்கலத்தால் ஆனது.
கீழவலசையில் கண்டெடுத்த தில் ஒன்று கி.பி.1833-ல் வெளியிடப் பட்டது. இக்காசின் ஒருபுறம் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே உருது வாசகமும் உள்ளது.
மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரிய மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. காலணா மதிப்புள்ளது. `ஒரு கால் அணா இந்தியா 1887' என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளன. காசின் பின்புறம் விக்டோரியா எம்ப்ரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது. அரசியாக இருந்த விக்டோரியா பேரரசியாக தன்னை கி.பி.1876-ல் பிரகடனப்படுத்தினார். இதனால் கி.பி.1877-க்குப் பின் வந்த காசுகளில் அவர் எம்ப்ரஸ் (பேரரசி) என குறிப்பிடப்பட்டுள்ளார்.
சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த இரண்டு காசுகளில், ஒன்று கி.பி.1835-ல் வெளியிடப்பட்ட சிறிய காசு. இதன் ஒருபுறம் கிழக்கிந்திய கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் 1/12 அணா எனவும் மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.
மற்றொன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப்பட்டது. இது காலணா மதிப்புள்ளது. `ஒரு கால் அணா இந்தியா 1887' என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளன. காசின் பின்புறம் ஆறாம் ஜார்ஜ் எம்பரர் என எழுதப்பட்டு அவரின் மார்பளவுப் படமும் உள்ளது.
திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். ஐயப்பன் கண்டெடுத்த காசுகள் இவ்வாறு விட்டவையாக இருக்கலாம்.
ஆனால் பிரவீன்ராஜ் கண்டெடுத்தவை மக்களின் சேமிப்பில் இருந்ததாக உள்ளது. திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் கீழே கிடந்த பாண்டியர், சோழர், டச்சுக்காரர் காசுகளை ஏற்கெனவே கண்டெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.