சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான க்யூட் தேர்வு மே 21 முதல் 31-ம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி இன்றுடன் (மார்ச் 12)நிறைவு பெறுவதாக என்டிஏ அறிவித்திருந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /cuet.samarth.ac.in/ என்ற வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் சிரமம் இருந்தால் 011 - 40759000/ 69227700 என்றதொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதற்கிடையே க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் இலவச உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.