சென்னை: காலை உணவுத் திட்டத்தை சென்னையில் மேலும் 5 மண்டலங்களுக்கு விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் கீழ் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 37 பள்ளிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,148 மாணவர்கள் காலை உணவு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டது. எண்ணூரில் இரண்டு இடங்கள், மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடம் மூலம் தற்போது உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 5 மண்டலங்களுக்கு இதை விரிவாக்கம் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "காலை உணவு திட்டத்தை மேலும் 5 மண்டலங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி தென் சென்னையில் உள்ள திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களில் செயல்படும் பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசிற்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களில் 5 பொது சமையல் கூடங்களை ஏற்படுத்தி, பள்ளிகளுக்கு காலை உணவை விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்த பின்பு இதற்கான பணிகள் தொடங்கும்" என்று அவர்கள் கூறினார்.