தென்காசி: கல்லூரிக்கு சென்று வர கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி ஆலங்குளத்தில் மாணவிகள் சாலை மறியல் செய்தனர்.
ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் திருநெவேல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவிகள் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்டணமின்றி பயணம் செய்ய நகரப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
காலையில் கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் ஆலங்குளத்தில் இருந்து போதிய பேருந்து வசதியின்றி மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்து வந்ததும் அதில் ஏராளமான மாணவிகள் ஏறுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலையும், பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்கின்றனர்.
காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்வதற்கு வசதியாக ஆலங்குளத்தில் இருந்தும், கல்லூரி முடிந்து திரும்பும்போது திருநெல்வேலியில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் தினமும் நெரிசலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஏராளமான மாணவிகள் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலி- தென்காசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனடியாக மாற்றுப் பேருந்து மூலம் மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலால் அசம்பாவிதம் ஏற்படும் முன் கல்லூரிக்கு சென்று வர வசதியாக கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “தென்காசி- திருநெல்வேலி இடையே பெரும்பாலான பேருந்துகள் இடைநில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
சுரண்டை மற்றும் நல்லூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் 2 பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. போதிய பேருந்துகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரண்டை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போதிய பேருந்து வசதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.