கல்வி

சென்னை இலக்கிய திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை இலக்கிய திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விநாடி-வினா, பேச்சுபோட்டி உட்பட பல்வேறு போட்டிகள், பயிற்சிப் பட்டறைகள் இன்று (ஜனவரி 4) தொடங்க உள்ளன.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கிய திருவிழா ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரைகோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

விழாவில் மாணவர்களுக்கான பயிலும் அரங்கம், சிறுவர்களுக்கு இலக்கிய அரங்கம், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம் என 4 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாட உள்ளனர். மேலும், தமிழ்கலாச்சாரம் சார்ந்த நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி: இந்த விழாவை மக்கள் அனைவரும் கண்டுகளிக்கலாம். நூலகவளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் காலம்முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கதை எழுதுதல், பேச்சு, நூல் திறனாய்வு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் இன்று (ஜனவரி 4) தொடங்கி வைக்கவுள்ளார்.

100 நூல்கள் வெளியீடு: இதுதவிர தமிழில் பிழையின்றி எழுதுதல், சமகால சூழலில் படைப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ் பயிற்சி பட்டறைகளும் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில்33 சிறார் நூல்கள் உட்பட 100 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

SCROLL FOR NEXT