சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னி கிருஷ்ணன், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் (யுவா-2.0), ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 30 வயதுக்கு கீழான இளம் எழுத்தாளர்கள் கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுதுவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.
யுவா திட்டத்தில் தேர்வாகும் 75 பேருக்கு தேசிய புத்தக அறக்கட்டளை (என்பிடி) வழியாக 6 மாதம் சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், மாதம் ரூ.50 ஆயிரம்ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு, ஜன.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி /innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவித்து யுவா திட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.