கல்வி

600 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம்: பள்ளிக்கல்வித் துறை கொடுப்பாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 600 தற்காலிக ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, அனைத்து மாவட்டகருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2008-2009-ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 600 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகஅடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இவர்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இந்த பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் இந்த ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதையேற்று 600 ஆசிரியர்களுக்கும் நவம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT