சென்னை: இந்தியாவில் தொழில்நுட்ப படிப்புகளில் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் ‘பிரகதி கல்வி உதவித் தொகை’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆண்டுதோறும் பொறியியல், பாலிடெக்னிக் படிக்கும் மாணவிகளில் தகுதியான 10,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் உயர் கல்வி படிக்க ஆண்டுதோறும் ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதுதவிர ‘சக்ஷம்’ திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும், ‘ஸ்வநாத்’ திட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்றவர்களுக்கும் கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு இத்திட்டங்களில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபரில் தொடங்கியது. இந்நிலையில் விண்ணப்பிக்க டிச.31 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகள் www.aicte-pragati-saksham-gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in-ல் அறிந்து கொள்ளலாம்.