கோப்புப்படம் 
கல்வி

தொழில் துறை நிபுணர்களை பயிற்சி அளிக்க நியமிக்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நேற்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் பல்துறை கல்வி வழங்க வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது.

இதற்காக பொறியியல், அறிவியல் உட்பட பல துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பங்கு அவசியமாகிறது. இதுபோன்ற நிபுணர்களை கல்வி நிறுவனங்களில் பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபுணர்கள் நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி நியமனம் செய்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம்.

இதற்கேற்ப, கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர் நியமன விதிமுறைகளில் உரியதிருத்தங்களை செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை, கல்வி நிறுவன செயல்பாடுகளை கண்காணிக்கும் யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT