சென்னை: தமிழகத்தில் 17 மையங்களில் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நவ.13-ம் தேதி நடைபெற உள்ளதாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டுகுடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7,077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023-ம் ஆண்டு மே 28-ம் தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழகத்தில் உள்ள 17 மையங்களில் வரும் 13-ம் தேதிநடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். நவ. 13-ம்தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை 2.30 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்ற இணையத்திலும், 044 – 24621475, 94442 86657 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.