கல்வி

நிதி நெருக்கடி காரணமாக அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போது தொடங்க இயலாது - நீதிமன்றத்தில் திருவள்ளுவர் பல்கலை. தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: நிதி நெருக்கடி காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போது தொடங்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க கடந்த 2006-ம் ஆண்டு பல்கலைக்கழக முதல் சிண்டிகேட் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தற்போது இந்த புதிய துறையைதொடங்க இயலாது. நிதிநிலை சீரானதும் இந்த துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என தமிழக அரசு மற்றும் பல்கலை. நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பல்கலைக்கழக நிதி நிலைமை சீராகும்பட்சத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அம்பேத்கர் படிப்புகள் துறையைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT