சென்னை: மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அனைத்து படிப்புகளுக்கான சேர்க்கையும் க்யூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் ஷிப்நாத் தேப் கூறியதாவது: க்யூட் தேர்வு (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே எங்கள் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை வழங்கப்படும். அதன்படி க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் www.rgniyd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் க்யூட் மதிப்பெண் மற்றும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த கல்வி நிறுவனத்தில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (டேட்டா சயின்ஸ்), எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (சைபர் செக்யூரிட்டி), எம்எஸ்சி கணிதம், எம்ஏ ஆங்கிலம், எம்ஏ சமூகவியல் உள்ளிட்ட புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த கல்வியாண்டில் குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான முதுநிலை படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.