அம்பத்தூரில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில்பல்வேறு தொழில் பாடப் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் பல்வேறு தொழில் பாடப் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கம்மியர், செயலகப் பயிற்சி, கட்டிடப் பட வரைவாளர், தையல் தொழில்நுட்பம், கோபா ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது.
மேலும், பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ.750, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியவை வழங்கப்படும்.
வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கல்வி, சாதி, மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.