சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பின், அதிமுக ஆட்சியில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப இத்திட்டத்தை மாற்றி அமைக்க முடிவெடுத்தது. அதன்படி, பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டம் மூலம் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்த புதிய முயற்சிக்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைனிலும், அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் மூலமும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது.
உயர்கல்வி உறுதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச் சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத்துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, இயக்குநரின் கருத்துரு தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். இத்திட்டம் முழுமையாக ஆன்லைன் வழியாக செயல்படுத் தப்படுகிறது. ஆன்லைன் உள்ளிட்ட வசதிகளை மின்னாளுமை நிறுவனம் பராமரிக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித் துறை, விண்ணப்பங்களை பெற்று வழங்கும். அத்துடன், மாணவிகளுக்கு டெபாசிட் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதையும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7-ம் தேதி பயனாளியின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 அனுப்புவதற்கான உத்தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.
இத்திட்டத்தை கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு திட்டம் கண்காணிக் கப்படுகிறது.
வழிகாட்டுதல்கள்