சென்னை: டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-1, குருப்-2 தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
இதற்கிடையே 92 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக். 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே கல்வி மையத்தில் மாணவர்கள் குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
தேர்வுக்கு குறுகியகாலமே உள்ளதால் குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழிகாட்டுதலாக அமையலாம். பயிற்சி வகுப்பு தொழில்நுட்ப ரீதியாகவும், மாணவர் திறனை வெளிக்கொணரும் விதமாகவும் கலந்துரையாடல் வடிவத்தில் நடைபெறும். துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள். மாதிரி தேர்வுகள் வார இறுதி நாட்களில் நடைபெறும்.
இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்துகொள்ளலாம். சென்னை பாரிமுனையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் வகுப்புகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
மேலும், பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்வதுடன், குரூப்-1 தேர்வு விண்ணப்ப நகலுடன் ஒரு புகைப்படமும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை சவுந்தர்- 90950 06640, வாசுதேவன்-94446 41712, அமலா-63698 74318, ஜனனி-97906 10961 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.