சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு தகுதிபெற்ற குழந்தைகளின் விவரம் நாளை (மே 28) வெளியிடப்பட உள்ளது.
இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 8,239 தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ல் தொடங்கி மே 25-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 42,175 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தகுதி பெற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விவரம் அந்தந்த பள்ளி தகவல்பலகை மற்றும் இணையதளத்தில்(rte.tnschools.gov.in) நாளை (மே 28) வெளியிடப்படும். ஏதேனும் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ல் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.