சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்நிலையில், நடப்பு ஆண்டு இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விருப்பம்உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.