கல்வி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 3 சுற்றுகளாக நடைபெற்ற கலந்தாய்வில், பெரும்பாலான இடங்கள் நிரம்பின.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்த காலி இடங்கள், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட 50 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்று, தமிழகத்தில் சேராத மாணவர்களால் ஏற்பட்ட காலி இடங்கள் என மொத்தம் 257 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மேலும், 500-க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன.

இந்த காலி இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வை வரும் 11-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு விண்ணப்பங்களைப் பெற்று, கலந்தாய்வை நடத்தியது. அதில், 257 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின. 298 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.

SCROLL FOR NEXT