சென்னை: டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டு ஆன்லைன் பி.எஸ். பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் உயர்தரக் கல்வி அளிக்கும் வகையில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி ஆகிய 4 விதமான பி.எஸ். பட்டப் படிப்புகளை சென்னை ஐஐடி ஆன்லைனில் வழங்கி வருகிறது.
இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்கள் இதை தனி பட்டப் படிப்பாகவோ, வழக்கமான கல்லூரி பட்டப் படிப்புடன் சேர்ந்தோ படிக்கலாம். இதற்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படும். நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப படிப்பைத் தொடரலாம். அவர்களது படிப்புக் காலத்துக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமா, பட்டம், பி.எஸ். பட்டம் என வழங்கப்படும். இப்படிப்புகளில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடையாது.
ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்சியும் அவசியம் இல்லை. தகுதிகாண் நடைமுறை மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதில் சேர விரும்புவோர் https://study.iitm.ac.in என்ற இணையதளம் வாயிலாக மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.