சென்னை: சைபர் பாதுகாப்பு துறையில் புதிய பட்டப் படிப்பை, சென்னை விஐடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு புதிய முன்னெடுப்புகளை விஐடி கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சைபர் பாதுகாப்பு துறையில் புதிய படிப்பை சென்னை விஐடி அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன் மூலம், சென்னை விஐடியில் இருந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) பட்டம், டீகின் பல்கலை.யில் இருந்து இளநிலை சைபர் பாதுகாப்பு (Bachelor of Cyber Security-Honours) பட்டம் ஆகிய 2 படிப்புகளை மாணவர்கள் கற்க முடியும்.
மாணவர்கள் தங்கள் படிப்பை முதலில் விஐடியில் தொடங்கி, பின்பு டீகின் பல்கலை.யில் நிறைவு செய்வர். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் கட்டுமான மேலாண்மை துறைகளில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வில், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், “ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டீக்கின் பல்கலைக்கழகத்துடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் ஒரே துறையில் இரண்டு பட்டங்களைப் பெறலாம். சைபர் பாதுகாப்பு துறையில் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனுள்ள, தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் வகையில் இந்த பட்டப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது’என்று தெரிவித்தார்.