சென்னை: தமிழகம் முழுவதும் 950 மையங்களில் தமிழ் மொழி இலக்கியத் திறனறி தேர்வு நேற்று நடைபெற்றது. பிளஸ் 1 மாணவர்கள் 2.70 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, திறனறி தேர்வை பள்ளிக்கல்வி இயக்ககம் நடத்துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பிற தனியார் பள்ளி மாணவர்கள் என அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வு தமிழகம் முழுவதும் 950 மையங்களில் நேற்று காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. 2.70 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் ஏராளமானோர் ஆர்வத்தோடு தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.