கோப்புப் படம் 
கல்வி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி

செய்திப்பிரிவு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் -1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 5,699 தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கவுர விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி வழங்கியும், அதற்கான தொகுப்பூதியத்துக்கு ரூ.156 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) ஷிப்ட்-1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 5,699 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு பணியாற்ற அனுமதியும் அதற்காக ரூ.156 கோடியே 52 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், "நடப்பு கல்வி ஆண்டில் 59 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட்-2 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள 1,661 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியை தொடர ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT