மத்திய பல்கலை.களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்குரிய கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2025-26) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 2-ல் தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 4 லட்சத்து 12,024 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் பாடவாரியாக விரிவான தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். இதில் ஏதும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.