சென்னை: பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை (கீ ஆன்சர்) தேர்வுத்துறை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் dgedsection@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 5-ம் தேதிக்குள் பெற்றோர்கள், மாணவர்கள் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை அனைத்து விதமான பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.