சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். அதன்படி 5 வயது நிறைந்த குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த குடியிருப்புகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் அதிகரிக்கவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி சேர்க்கை பணிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டும்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், இணையதள வசதி, கையடக்க கணினி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதை பின்பற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.