கல்வி

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது: பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கின. இத்தேர்வு 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகள் பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25-30 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆய்வகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில தகைசால் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், சென்னை எம்சிசி பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனும் செய்முறை தேர்வை ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT